ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் தெற்குப் பகுதியில் உள்ள மஸாஃபர் யத்தாவில் புதிய கல்வியாண்டுக்காக ஃபரா, முகமது மற்றும் ஜவாத் ஆகியோர் தயாராகி வருகின்றனர்.
17, 8 மற்றும் 7 வயதுடைய இக்குழந்தைகள், அதே பெயரைக் கொண்ட கிராமத்தில் அமைந்துள்ள ஷஅப் அல்-புதும் பள்ளியில் கல்வி கற்கின்றனர். ஆனால், ஆகஸ்ட் 4ஆம் திகதி இஸ்ரேலியப் படைகள் பள்ளியின் இரண்டு நிர்வாக அறைகளையும் ஒரு களஞ்சிய அறையையும் இடித்துத் தள்ளியதால், அவர்கள் திரும்பிச் செல்லவுள்ள பள்ளிக் கட்டிடத்தில் தற்போது அந்த மூன்று அறைகளும் இல்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் தகவலின்படி, இஸ்ரேல் வழங்கிய கட்டிட அனுமதியின்றி அந்தக் கட்டமைப்புகள் கட்டப்பட்டதாகக் கூறி அவற்றை இடித்ததாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் நிர்வாக மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ‘C’ பகுதியில், பாலஸ்தீனியர்கள் இத்தகைய கட்டிட அனுமதிகளைப் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக உள்ளது.








