கட்டாரில் உள்ள அல்-உடைட் (Al Udeid) வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் தமது போர் விமானங்கள் மூலம் பராமரிப்பு நிலையம் மற்றும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை அழிக்கப்பட்டதாக ஈரான் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், ஓமானிலுள்ள அமெரிக்க கடற்படை வழங்கல் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தை இலக்கு வைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஈரானிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தமது வான்பாதுகாப்பு அமைப்புகள் மூலம் முறியடித்து வருவதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பதால், கட்டார் நாட்டு மக்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது வேறு பாதுகாப்பான இடங்களிலோ தங்குமாறு அந்த நாட்டின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அந்நாட்டு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், பஹ்ரைனில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் அமைதியாக இருக்குமாறு அந்நாட்டின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே ஜோர்தானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதில் பிரின்ஸ் ஹசன் வான்படைத் தளத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் MQ-9 ட்ரோன் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையங்கள் அழிக்கப்பட்டதாகவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.









