பிரபல பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படாவிட்டால், மாணவர்கள் குறைவாக உள்ள பாடசாலைகள் மூடப்படுவதை தவிர்க்க முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்க ஒன்றியத்துக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும்(Harini Amarasuriya) இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொழும்பு பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்தமை தொடர்பான தகவல்களை முன்வைத்து, அரச பாடசாலைகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருவது தொடர்பான உண்மைகளையும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஒரு வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை 35க்கும் குறைவாக வைத்திருக்கும் யோசனையை பரிசீலித்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கத்திற்கு அறிவித்துள்ளார்.
அத்துடன், ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை 35ஆக கட்டுப்படுத்தும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.