இந்த ஆண்டு மகளிர் தினத்தைக் கொண்டாடும் பெண்கள், சட்டத்தின் அதிகாரம் மற்றும் பாதுகாப்புடனேயே வீடு திரும்புகின்றனர்.
- ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் மே மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
- ஆசியாவிலேயே முதன்முறையாக ஆண், பெண் சமூக அடிப்படையைக் கொண்ட வரவு செலவுத் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
- பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க சட்டம் கொண்டு வரப்படும்.
- நாடு பூராகவும் உள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரப் பிரிவு- ஜனாதிபதி.
ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் இரண்டும் எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டத்தின் பிரகாரம் தனியான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாகவும், அரசியலமைப்பின்படி பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறிமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கும் வலுவூட்டலுக்குமான ஏற்பாடுகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இன்று (8) முற்பகல் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின தேசிய கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் நேற்று (7) வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாகவும், ஆண், பெண் சமூக சமத்துவ சட்டமூலம் எதிர்வரும் வாரத்தில் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், ஆண், பெண் சமூக அடிப்படையைக் கொண்ட வரவு செலவுத் திட்டத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், இது ஆசியாவிலேயே முதன்முறையாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவு ஸ்தாபிக்கப்படும் எனவும், அதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சியளிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறினார்.
இதுவரையில் எமது நாட்டில் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் பெண்களின் உரிமைகள் பற்றி பேசுவதாக மாத்திரமே இருந்த போதிலும், பெண்களின் உரிமைகள் பேச்சளவில் மாத்திரம் இருக்கக் கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்காக அரசாங்கம் தற்போது தேவையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த விடயங்கள் அனைத்தையும் தேசியப் பொறுப்பாகக் கருதி நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்கு தெளிவூட்டுமாறு வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவ்வாறு அல்லாமல் இந்தச் சட்டங்கள் விதிமுறைகளைக் கொண்டு வருவது மாத்திரம் போதுமானதாக இருக்காது என்றும் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத் தேசிய கொண்டாட்டம் “அவளுக்கான பலம் – நாட்டுக்கான முன்னேற்றம்” என்ற தொனிப்பொருளில் பெருமையுடன் நடைபெற்றதுடன், நாடளாவிய ரீதியில் இருந்து பெண்கள் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான பெண்கள் இதில் கலந்துகொண்டனர்.
தற்காலிக பெண்கள் பராமரிப்பு நிலையங்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பெண்கள் பணி அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அதிகார சபைகளின் யாப்பு என்பன, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்கவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.
தற்காலிக பெண்கள் பராமரிப்பு நிலையங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியின் கீழ் முச்சக்கர வண்டிகள், கணனிகள், அச்சு இயந்திரங்கள் என்பனவும் இதன்போது அடையாள ரீதியில் வழங்கிவைக்கப்பட்டன.
அழகுக் கலை சார்ந்த கற்கைகளுக்கும் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
ஒழுங்குபடுத்தப்படாத துறைகளில் இருந்து பெறப்படும் நுண் நிதிக் கடன்களின் சுமையிலிருந்து விடுபடுவதற்காக வழங்கப்படும் “லிய சவிய” கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் நிகழ்வும் அடையாள ரீதியில் இங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும், பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டின் கீழ், நீர்கொழும்பு, போலவலான, குட் ஷெப்பர்ட் கான்வென்ட் நடத்திய NVQ 3 நிலை தாதியர் பராமரிப்பு சேவை தொழில்முறை பயிற்சி நெறியை வெற்றிகரமாக முடித்த இளம் பெண்களுக்கு சான்றிதழ்களும் இதன்போது வழங்கப்பட்டன.