ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்கு கண்ணாடிகள் மற்றும் செவிப்புலன் கருவிகளை வழங்கும் திட்டத்தின் முதலாவது நிகழ்வு 19.09.2026 ரஜரட்ட பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமானது.
இங்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு லென்ஸ்களும் வழங்கப்பட்டதுடன், தனியார் துறையின் பங்களிப்புடனும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாகக் கிடைத்துள்ள கண் கண்ணாடி சட்டங்களை பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழினுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் பிரஜைகளுக்கு இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து பிள்ளைகளும் எவ்வித தடையுமின்றி கல்வியைப் பெறுவதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பதே ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், எதிர்காலத்தில் இத்திட்டம் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரொஷான் கமகே தெரிவித்துள்ளார்.
தற்போது ஜனாதிபதி நிதியத்தின் பலன்கள் நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் அதன் பலன்களைப் பெற வேண்டிய உரிய தரப்பினருக்கும் கிடைத்து வருவதாகச் சுட்டிக்காட்டிய ரொஷான் கமகே, சிறந்த நிர்வாகம் காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஜனாதிபதி நிதியம் 50% வலுவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.








