2012ஆம் ஆண்டு முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (14) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, முறைப்பாட்டுத் தரப்பு சாட்சிகளிடம் இருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதுடன், பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் குறுக்கு விசாரணையும் முன்னெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.








