எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறாவிட்டாலும், லபுமக மற்றும் களத்துவாவி நீர்த்தேக்கங்களில் காணப்படும் நீர் மட்டமானது தடையற்ற நீர் விநியோகத்திற்கு அக் காலப்பகுதிக்கு போதுமானது என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எல் நினோ நிலைமை காரணமாக ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் எதிர்பார்க்கப்பட்டதை விட வறண்ட வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள போதிலும், நீர்வழங்கல் வாரியத்தின் நிபுணர்களின் தகவல்களுக்கு அமைவாக லபுமக மற்றும் களத்துவாவி நீர்த்தேக்கங்களின் தற்போதுள்ள நீர் கொள்ளளவானது எதிர்வரும் மூன்று மாதங்களுக்குப் போதுமானது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நீர் வெட்டுத் தொடர்பான தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதுடன், எதிர்வரும் இரு மாதங்களுக்கு எந்தவித ஆபத்துமில்லை என நம்புவதாகவும், எனினும் நிலைமை மாறக்கூடும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.









