பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
செல்லப்பிராணிகளை வளர்ப்பதென்பது நமது கலாசாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் அதேவேளையில், தெருக்களில் வசிக்கும் விலங்குகளின் உயிர்களைப் பாதுகாப்பதும் நம் அனைவரினதும் பொறுப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஜூலை 17 ஆம் திகதி, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமான “PET EXPO 2026” கண்காட்சியின் தொடக்க விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை செல்லப்பிராணிகள் கால்நடை மருத்துவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கண்காட்சியில், தெருவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த “ஆலோகா” கண்காட்சிக் கூடத்தினையும் பிரதமர் பார்வையிட்டார். இதன்போது, தெருநாய்க்குட்டியொன்றை அதனைப் பராமரிப்பதற்காக விண்ணப்பித்திருந்த ஒருவரிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைத்து, கண்காட்சியின் பணிகளைப் பிரதமர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
இலங்கையில் கால்நடை மருத்துவ சேவை தொலைநோக்குப் பார்வையுடன் வளர்ச்சியடைந்து வருவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களில் சிறிய நாய்க்குட்டிகளையும் பூனைக்குட்டிகளையும் கைவிட்டுச் செல்வது நாட்டில் ஒரு தவறான பழக்கமாக இருந்து வருகின்றது. எனவே, தெருவிலங்குகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு நான் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
விலங்குகள் நலன்புரி தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றுக்கு அங்கீகாரம் வழங்க முடிந்ததன் மூலம், விலங்குகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
அத்தோடு, சமீபத்தில் உலகப் புகழ்பெற்ற இலங்கையின் சிறுமி ஒருவருக்கும் முள்ளம்பன்றிக்குமிடையிலான அரிய பாசப் பிணைப்பை நினைவுகூர்ந்த பிரதமர், செல்லப்பிராணிகளுக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான உறவானது குழந்தைகளின் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்டார்.
விலங்குகளுடன் இணைந்து வாழ்வதன் மூலம், குழந்தைகளின் வாழ்க்கையில் பரஸ்பர பரிவும், பாசமும், கருணை போன்ற நற்பண்புகளை நடைமுறையில் வளர்த்துக்கொள்ள முடிகின்றது என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் இலங்கை செல்லப்பிராணிகள் கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் கால்நடை மருத்துவர் நுவன் விக்ரமசிங்க உள்ளிட்ட அதன் உறுப்பினர்களும், கொழும்பு மாநகர சபையின் முதல்வர் வ்ராய் கெலி பால்தசார், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பீடத்தின் பீடாதிபதி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.









