விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிக வட்டிக்கு கடன் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் புதிய வங்கி ஒன்றை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் இதனைத் தெரிவித்தார்.
இந்த வங்கியின் ஊடாக ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு ஒரு இலட்சம் ரூபா உற்பத்திச் செலவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், சீனாவுடன் கலந்துரையாடி ஒவ்வொரு விவசாயத் திட்டத்திற்கும் ‘விவசாய உபகரண மத்திய நிலையம்’ ஒன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இது குறித்து பிரதி அமைச்சர் டி.பி. சரத் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“இன்னும் இரண்டு அல்லது மூன்று போகங்கள் செல்லும்போது, ‘யாய’ விவசாய சங்கங்களை உருவாக்கி, விவசாயிக்கு பயிர்ச்செய்கைக்குத் தேவையான பணத்தை வழங்குவோம். நமது விவசாயிகள் வெளிநபர்களிடம் அதிகளவில் கடன் படுகிறார்கள். கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி, அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் நெல்லை விற்கிறார்கள்.
கந்துவட்டிக்குக் கடன் வாங்குவதனாலேயே உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. எனவே, புதிய வங்கி ஒன்றை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம். அதன் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு ஏக்கருக்கு ஒரு இலட்சம் ரூபா உற்பத்திச் செலவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன், சீனாவுடன் கலந்துரையாடி ஒவ்வொரு விவசாயத் திட்டத்திலும் ‘விவசாய உபகரண மத்திய நிலையம்’ ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
உலகின் அதிநவீன இயந்திரங்கள், பெரிய ரக உழவு இயந்திரங்கள் (Tractors), நெல் அறுவடை இயந்திரங்கள், ட்ரோன்கள் (Drones), வரப்பு வெட்டும் மற்றும் வரப்பு கட்டும் இயந்திரங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்யவுள்ளோம். அந்த நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வசதிகள் செய்து தரப்படும்.
நாங்கள் ஆட்சியைப் பொறுப்பேற்று இன்னும் ஒன்றரை வருடங்களே ஆகின்றன. விவசாயி எழுப்பும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்காகவே ஐந்து வருடங்களுக்கு நாங்கள் ஆட்சியைப் பொறுப்பேற்றோம்” என்று தெரிவித்தார்.









