நுளம்புக் கடியிலிருந்து பாதுகாப்பதற்காகப் பாடசாலை மாணவர்கள் சீருடைக்கு மேலதிகமாக கைகள் மற்றும் கால்களை மூடும் வகையிலான பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு வாய்ப்பளிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் டெங்கு பரவலைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக களுவெவ தெரிவித்தார்.
இது தொடர்பில் அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, உரிய தரத்திலான நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்துவது குறித்தும் மாணவர்களுக்குத் தெளிவுபடுத்துமாறு குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









