நாள் ஒன்றுக்கு தலா 10 மெட்ரிக் தொன் வரையான நெல்லை உலர்த்தும் திறன் கொண்ட, சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான 50 நவீன தொழில்நுட்ப நெல் உலர்த்தும் இயந்திரங்களை நாடு பூராகவும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, மிகவும் சுறுசுறுப்பாகவும் ஸ்திரமான நிலையிலும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் முன்னேற்றத்திற்காக 500 மில்லியன் ரூபா பரவலாக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முறையான திட்ட அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து, நெல் உலர்த்தும் இயந்திரங்கள் தேவைப்படும் கூட்டுறவுச் சங்கங்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் விவசாயிகள் தமது அறுவடைகளை கூட்டுறவுச் சங்கங்களுக்கு விற்பனை செய்து அதிக விலையைப் பெற்றுக்கொள்ளவும், கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களான விவசாயிகள் மிக எளிதாக இந்த உலர்த்தும் இயந்திரங்களைப் பயன்படுத்தி தமது அறுவடைகளை உலர்த்திக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.
கடந்த பெரும் போகத்தில் சாதனை அளவிலான நெல் அறுவடை கிடைத்திருந்த நிலையில், இந்த சிறு போகத்திலும் விவசாயிகள் பெருமளவில் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ளதால் நாட்டில் எந்தவொரு அரிசித் தட்டுப்பாடும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான அனைத்துக் களஞ்சியசாலைகளையும் உடனடியாகத் திறந்து, சதொச மற்றும் ஏனைய அரச நிறுவனங்களை ஒன்றிணைத்து, இந்த சிறுபோக நெல் அறுவடையை விவசாயிகளிடமிருந்து நியாயமான விலைக்குக் கொள்வனவு செய்வதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் நெல் கொள்வனவுச் செயல்முறையை வலுப்படுத்துவதன் மூலம் சந்தையில் நியாயமான போட்டியை உருவாக்கி, நுகர்வோருக்குச் சலுகை விலையில் அரிசியை வழங்கவும், தனியார் துறையினரும் விவசாயிகளுக்கு நியாயமான விலையைச் செலுத்தும் நிலையை உருவாக்கவும் எதிர்பார்ப்பதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.









