வெசாக் தினம் என்பது ஒரு மத ரீதியான வைபவம் என்பதைத் தாண்டி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கை மக்களின் தனித்துவம், கூட்டுப்பொறுப்பு மற்றும் கலைநயமிக்க ஆக்கத்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த கலாசார விழாவாகவும் விளங்குவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புத்த பெருமானின் மூன்று புனித நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் வைபவம், உலகெங்கும் வாழும் பௌத்தர்களின் மிகப் புனிதமான ஆன்மிக விழாவாகும். பௌத்த மத பாரம்பரியத்தால் செழித்து விளங்கும் உயரிய கலாசாரத்தை மரபாகக் கொண்ட இலங்கை மக்கள், உலக பௌத்த மதத்தவர்களுடன் இணைந்து இப்புனிதத் திருநாளை பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.
பௌத்த தர்மம் என்பது ஒட்டுமொத்த உலகிற்கும் நடைமுறைச்சாத்தியமான, எக்காலத்திற்கும் பொருத்தமான அமைதிச் செய்தியைக் கொண்டு வந்த மிகச் சிறந்த போதனையாகும். கௌதம புத்த பெருமானால் போதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தர்மமும் அன்பு , கருணை, மகிழ்ச்சி மற்றும் சமநோக்கு ஆகிய நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, அமைதி, சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் குறித்த முன்மாதிரியான பாடம், புத்த பெருமான் உட்பட அனைத்து சமயத் தலைவர்களும் போதித்த தர்மமாகும். வெளி உலகில் அமைதியை ஏற்படுத்துவதற்கு, முதன்முதலில் மனிதனின் உள்ளத்தில் ஆன்மீக அமைதி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை பௌத்த தர்மம் சுட்டிக்காட்டுகிறது.
பொதுவான நல்நோக்கங்களுக்காக சமூகத்தை ஒன்றிணைக்க, பௌத்த தர்மம் காட்டும் இந்த உள அமைதி வழியானது, முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அண்மையில் நம் நாட்டில் அமைதிக்கான பாதயாத்திரையில் ஈடுபட்ட வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பஞ்ஞாகர தேரர்களும் இலங்கைக்குக் கொண்டு வந்த செய்தி இதுவே என்று நான் நம்புகிறேன்.
மேலும், வெசாக் தினம் என்பது ஒரு மத ரீதியான வைபவம் என்பதைத் தாண்டி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கை மக்களின் தனித்துவம், கூட்டுப்பொறுப்பு மற்றும் கலைநயமிக்க ஆக்கத்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த கலாசார விழாவாகவும் விளங்குகிறது.
இந்த வைபவத்தை முன்னிட்டு கொள்கை ரீதியான வழிபாட்டிற்கு முதலிடம் வழங்கி ஏற்பாடு செய்யப்படும் தானம், சீலம், தியானம், தர்ம போதனை போன்ற நிகழ்வுகளும், அண்ணதானப் பந்தல்கள் , பௌத்த பக்திப் பாடல்கள், அழகிய வெசாக் கூடுகள் மற்றும் கண்கவர் தோரணங்கள் போன்ற அலங்காரங்களும் இனங்களுக்கிடையில் பரஸ்பர புரிதல், நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை வளர்ப்பதற்குப் பெரும் பக்கபலமாக அமைகின்றன என்பதில் ஐயமில்லை.
அனைத்து இனங்களுக்கிடையிலும் பரஸ்பர புரிந்துணர்வு,ஒற்றுமை, மற்றும் சகவாழ்வை மேம்படுத்தும் வெசாக் வைபவம் நல்லிணக்கத்தின் அடையாளமாகும். அகிம்சை, கருணை மற்றும் அனைத்து உயிரினங்கள் மீதான எல்லையற்ற அன்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சம்புத்த தர்மத்தின் விழுமியங்களை நமது வாழ்க்கையில் மேலும் இணைத்துக் கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுடன், தர்மத்தின் குளிர்ச்சியால் அனைவரது மனங்களும் அமைதியடையும் உன்னத வெசாக் தினமாக இந்த தினம் அமையட்டும் என வாழ்த்துவதாக ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.









