பெரிய வெங்காய விதை உற்பத்தி கிராமமொன்றை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அனுராதபுரம் – நாச்சதூவ குடியேற்றப் பகுதியை இவ்வாறு பெரிய வெங்காய விதை உற்பத்தி கிராமமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் பி. சிசிர குமார தெரிவித்துள்ளார்.
நாட்டின் வருடாந்த பெரிய வெங்காயத் தேவை 325,000 மெட்ரிக் தொன்களாகும்.
இருப்பினும், உள்நாட்டில் சுமார் 50,000 மெட்ரிக் தொன் பெரிய வெங்காயமே உற்பத்தி செய்யப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருடத்திற்குள் உள்நாட்டு உற்பத்தியை 70,000 மெட்ரிக் தொன் வரை அதிகரிக்கும் நோக்கில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விவசாய திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி, தரமான பெரிய வெங்காய விதைகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து, விதை இறக்குமதிக்காக செலவிடப்படும் செலவைக் குறைக்கும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன் ஆரம்ப விழா நாளை (25) நடைபெறவுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் பி. சிசிர குமார மேலும் தெரிவித்துள்ளார்.









