ஜனாதிபதியுடனான மின்சார தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தை வெற்றி மின்சார தொழிற்சங்கத்தினர் 13.03.2026 நண்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதுடன், அந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
தமது பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி நியாயமான தீர்வை வழங்குவார் என எதிர்பார்ப்பதாக மின்சார தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
அரசாங்கத்தைத் தோற்கடிக்க வேண்டிய தேவை தமது சங்கங்களுக்கு இல்லை என மின்சார தொழிற்சங்க உறுப்பினர்கள் இதன்போது வலியுறுத்தினர்.
புதிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையினருடன் ஜனாதிபதி இன்று மாலை விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும், அதன் போது மின்சார தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க ஜனாதிபதி உடன்பாடு தெரிவித்துள்ளதாகவும் தொழிற்சங்க உறுப்பினர்கள் கூறினர்.
புதிய நிறுவனங்களுக்கு வௌியிலிருந்து இணைத்துக்கொள்ளப்படவிருந்த மின்சார அதிகாரிகள் மற்றும் மின்சார பொறியியலாளர் நியமனங்களை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் மின்சார தொழிற்சங்கங்கள் மேலும் தெரிவித்தன.









