இந்த வருட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
“தமக்கென ஓரிடம் அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளின் கீழ் 2026 தேசிய வீடமைப்புத் திட்டம் 25.02.2026 ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் இந்த வீடமைப்பு நிர்மாணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுசில் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
”இந்த வருடம் 2026 திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதில் சுமார் 25,000 வீடுகள் நேரடி உதவியின் கீழேயே நிர்மாணிக்கப்படவுள்ளன. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் சுமார் 10,000 குடும்பங்களுக்கு வீடமைப்பு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக 10,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஒரு மில்லியன் ரூபாய் வீதம் மானியம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒருவரது சொந்த வீட்டை அமைத்துக் கொள்வதற்காக வழங்கப்படும் மீள அறவிடப்படாத ஒரு நிதியுதவியாகும். பெப்ரவரி 25ஆம் திகதி 13 மாவட்டங்களில் 1,500 குடும்பங்களுக்கு 1,500 வீடுகளை நிர்மாணிப்பதற்காக 1,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கும் பணிகள் ஆரம்பமாகும்.” என்றார்.










