இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 17.02.2026 பிற்பகல் இந்தியா நோக்கிப் புறப்படவுள்ளார்.
செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நலனுக்காகப் பொறுப்புடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இதில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் 19ஆம் திகதி விசேட உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலப் பயணம் மற்றும் உலகளாவிய சவால்களை வெற்றிக்கொள்ள அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த இந்திய விஜயத்தின் போது, ஜனாதிபதி அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளார்.









