முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 50,000 ரொக்கப் பிணை மற்றும் தலா ரூபாய் 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்லவும், வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன் விசாரணைக்காக குறித்த இரண்டு வழக்குகளையும் ஜனவரி மாதம் 12 மற்றும் 14 ஆம் திகதிகளில் அழைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய மற்றும் அவரது மகன் ரமித் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இன்னுமொரு வழக்குக்கும் இதன்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது ரூபா 50,000 ரொக்கப் பிணை மற்றும் தலா ரூபா 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளதோடு, வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதித்து அவர்களது கை ரேகைகளைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இவ் வழக்கு மீண்டும் முன் விசாரணைக்காக ஜனவரி மாதம் 20ஆம் திகதி அழைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
அமைச்சராக கடமையாற்றிய காலப்பகுதியில் முறைக்கேடாக சொத்துக்களை ஈட்டியமை தொடர்பிலேயே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது










