பேருந்துகளில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் நேற்று (15) சுமார் 217 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதில் பயணச் சீட்டுக்களை வழங்காத 18 நடத்துனர்களுக்கும் பயணச் சீட்டு இன்றி பயணித்த 5 பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட குறித்த அதிகார சபையின் தலைவர் காமினி ஜாசிங்க,
பயணிகள் பேருந்து பயணங்களின்போது பயணச் சீட்டுக்களை தம் வசம் வைத்திருக்காவிட்டால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, பயணக் கட்டணத்தை இரு மடங்காக செலுத்தவும் வேண்டும்.
அதேநேரம் நீங்கள் கேட்டும் நடத்துனர் பயணச் சீட்டு வழங்கவில்லையென்றால், 070-2860860 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யுமாறு காமினி ஜாசிங்க தெரிவித்தார்.
இதுதொடர்பிலான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.