பொலன்னறுவை – ஹிங்குரக்கொட, பக்கமுன கல்வி வலையத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் சுமார் 45 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு அந்த பாடசாலையில் 01.10.2025 நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
நிகழ்ச்சி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பியதன் பின்னர் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளை பக்கமுன பிராந்திய வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அவர்களில் பல மாணவர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதுடன் சிலர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
குறித்த பாடசாலையில் சுமார் 230 மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பக்கமுன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










