காலி மாநகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
காலி மாநகர சபையின் முதல் கூட்டம் 20.06.2025 வெள்ளிக்கிழமை உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.
காலி மாநகர சபையின் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதா? அல்லது பகிரங்க வாக்கெடுப்பு நடத்துவதா? என்பதை முடிவு செய்வதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், ரகசிய வாக்கெடுப்புக்கு ஆதரவாக 19 பேரும், பகிரங்க வாக்கெடுப்புக்கு ஆதரவாக 17 பேரும் வாக்களித்தனர்.
இதற்கமைய பெரும்பான்மையினரின் விருப்பத்தின் அடிப்படையில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் பல உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்து புறக்கணித்த நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் அழைக்கப்பட்டனர்.
இதன் காரணமாக, சபை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் சுனில் கமகே 19 வாக்குகளைப் பெற்று காலி மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரதி மேயராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரியந்த சகபந்து தெரிவு செய்யப்பட்டார்.









