இலங்கையின் எரிபொருள் விநியோகத்தை அச்சுறுத்தும் வகையில் எரிபொருள் இறக்குமதி கப்பல் திருப்பி அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் ஜே.டி.ராஜகருணா மறுத்துள்ளார்.
அரசாங்க ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ராஜகருணா,
30,000 மெற்றிக் தொன் எரிபொருளைக் கொண்ட யுனைடெட் பெட்ரோலியத்தின் இறக்குமதிக்கான கப்பல் டிசம்பர் 2 ஆம் திகதி இலங்கைக்கு வந்ததாகவும், ஆனால் யுனைடெட் பெட்ரோலிய நிறுவனத்தினுள் காணப்பட்ட சில உள்ளக பிரச்சினைகள் காரணமாக அக்கப்பல் இங்கு பெற்றோலை இறக்காமல் வெளியேறியதாகவும் தெளிவுபடுத்தினார்.
“அன்னளவாக இன்னும் இரண்டு வாரங்களுக்கு விநியோகிக்க போதுமான கையிருப்பு அவர்களிடம் (யுனைடெட் பெட்ரோலியம்) உள்ளன.
நாங்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தி தேவை எனில் அவர்களின் எரிபொருள் நிலையங்களுக்கு CPC எரிபொருளை விநியோகிக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்,” என்று ராஜகருணா கூறினார்,
ஒரு நிலையான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கான முழுப் பொறுப்பையும் அரச நிறுவனம் என்ற வகையில் CPC ஏற்றுக்கொள்கிறது.
United பெற்றோலியத்திற்கு வந்த அந்த கப்பலில் 15,000 மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் 15,000 மெற்றிக் தொன் டீசல் வந்து திரும்பி செல்லப்பட்டதாக ராஜகருணா தெரிவித்தார்.
United பெற்றோலியத்திற்கும், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் எரிபொருள் கையிருப்பில் தொடர்பில்லை என்றும் அது வெளியேறியது நாட்டின் எரிபொருள் இருப்புக்களை பாதிக்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.
2022 ஆம் ஆண்டில், இலங்கையின் எரிபொருள் உரிமங்களை சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட RM Parks ஆகிய மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கியது.
நாட்டின் எரிபொருள் இறக்குமதிக்கான வெளிநாட்டு நாணய கையிருப்பை பாதுகாப்பதில் CPC இன் சுமையை குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.