இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 2,000 இணைய அச்சுறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) தெரிவித்துள்ளது.
இணையவழி குற்றச் செயல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கணினி அவசர தயார்நிலைக் குழுவின் அதிகாரி சாருகா தமுனுபொல தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமீபத்திய மாதங்களில் இணையவழி குற்றச் செயல்கள் தொடர்பில் 9,500 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 981 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்டவை என்பதுடன், இணையவழி பாதுகாப்பு முறைமையே இதற்கு காரணம்.
இணையவழி அச்சுறுத்தல்கள் தவிர, இணைய மோசடிகள் சம்பந்தப்பட்ட கிட்டத்தட்ட 1,600 சம்பவங்கள் சமீப காலங்களில் பதிவாகியுள்ளன. இது இணைவழி மோசடியாளர்களால் ஏற்படும் அச்சுறுத்தலை மேலும் சுட்டிக்காட்டுகிறது.
இணையவழி குற்றச் செயல்களின் அதிகரிப்பு, டிஜிட்டல் துன்புறுத்தலைச் சமாளிக்கவும், இணையவழி பயனர்களைப் பாதுகாக்கவும் வலுவான நடவடிக்கைகளின் அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்நிலையில் இலங்கையில் இணையவழி பாதுகாப்பிற்காக, அதிக விழிப்புணர்வு பிரச்சாரங்களுடன் மேலும் வலுவான சட்டங்கள் அவசியமென நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.










