( ஐ. ஏ. காதிர் கான் )
கல்விக்கு முன்னுரிமை வழங்கும் கொள்கையின் ஊடாக, நமது நாட்டை கல்விக் கேந்திர நிலையமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்வேன். இந்த வங்குரோத்து நிலையிலிருந்து வெளியே வருவதற்கு கல்வி என்பது எமக்கு பிரதான காரணிகளில் ஒன்றாக அமைந்து காணப்படுகிறது என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
“பிரபஞ்சம்” தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 343 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன கம்பஹா, பியகம, மல்வான, உலஹிட்டியாவல அல் மஹ்மூத் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு, (19.07.2024) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்ட இந்நிகழ்வில், சஜித் பிரேமதாஸ தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது,
அனைத்து பிரதேச செயலகங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை ஆரம்பிப்பேன். இதில், புதிய தொழில்களை துவங்குவதற்கான தொழில்முனைவோரை உருவாக்கும் திட்டத்தைக் கொண்டு வருவேன். இதன் கீழ், ஒரு மில்லியன் புதிய தொழில்முனைவோர் உருவாக்கப்படுவதோடு, முக்கிய பணியாளர்களும் மனித மூலதனமும் இங்கு உருவாக்கப்படும். தொழில்நுட்பத்தைக் கிராமத்துக்குக் கொண்டு சென்று, மனித மூலதனத்தின் பெருமதியைக் கூட்டும் நடவடிக்கைகளை இதனால் எதிர்பார்க்கிறோம்.
ஆட்சியாளர்கள் பல்வேறு மாநாடுகளை நடத்தி, டிஜிட்டல் இலங்கையை உருவாக்குவோம் என்று கூறுகிறார்கள். “டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்துவோம்” என்று நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து கொண்டு கூறி வருகின்றனர். இவற்றைச் சொல்வதற்கு முன் பாடசாலைகளில் தரம் 1-13 வரை தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கப்பட வேண்டும். இது ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட வேண்டும். பொய்யாக வீராப்புப் பேசுவதற்கு பதிலாக, வளங்களின் பற்றாக்குறைகளுக்கான தீர்வுகளைத் தேடிக் கொடுப்பதில், ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.