சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்பாக இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் தற்போதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
பதில் அத்தியட்சகர் பதவியிலிருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பொதுமக்கள் இவ்வாறு கண்டனம் தெரிவிக்கின்றனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை என்பன மூடப்பட்டுள்ளன.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகரை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று திங்கட்கிழமை வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு வந்து தமது கடமைகளை ஆரம்பித்துள்ளதுடன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரனவின் கட்டுப்பாட்டில் வைத்தியசாலை இயங்க ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பொதுமக்கள் போகச் சொல்லாமல் தான் வெளியேற மாட்டேன் எனத் தெரிவித்து வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்தும் வைத்தியசாலையில் இருந்து வருகிறார்.
பொதுமக்கள் வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏ9 வீதியூடான போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.
வீதியை மறித்துப் போராடுவது சட்டவிரோதமானது என காவல்துறையினர் அறிவித்தல் விடுத்தமைக்கு இணங்க பொதுமக்கள் வீதியை விட்டு விலகி வீதியோரமாகத் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.