இந்திய அமைதிப்படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமது தாய் மற்றும் சகோதரனின் எலும்புக்கூட்டு எச்சங்களுக்கு, இந்து சமய முறைப்படி இறுதிக் கிரியைகளை அவர்களது பிள்ளைகள் நேற்று முன்தினம் (23.03.2025) ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றியுள்ளனர்.
1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில், இந்திய அமைதிப்படையினர் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்தபோது, ஒரு பெண்ணையும் அவரது மகனையும் இந்திய இராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்தனர்.
அந்தக் காலத்தில், இந்திய இராணுவத்திற்கு அஞ்சிய அப்பெண்ணின் கணவர், தமது ஏனைய பிள்ளைகளின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில், வீட்டு வளவினுள் தனது மனைவி மற்றும் உயிரிழந்த மகனின் சடலங்களைப் புதைத்து, அதற்கு ஒரு நடுகல் நாட்டினார்.
சில காலங்களின் பின்னர், யாழ்ப்பாணத்திலிருந்து தனது ஏனைய பிள்ளைகளுடன் வெளிநாட்டிற்கு இடம்பெயர்ந்து, அங்கு வசித்து வந்தார்.
அப்போது, தனது மனைவி மற்றும் மகனின் உடல்களை மீண்டும் எடுத்து, இந்து சமய முறைப்படி தகனக் கிரியை செய்ய வேண்டும் என அவர் தனது மற்றைய பிள்ளைகளிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் காலமானார். தமது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, யாழ்ப்பாணம் திரும்பிய அவரது பிள்ளைகள், தமது தாய் மற்றும் சகோதரனின் சடலங்களை மீண்டும் தோண்டி எடுக்க, நீதிமன்றத்தில் அனுமதி கோரி வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியதை அடுத்து, தாய் மற்றும் சகோதரனின் எலும்புக்கூட்டு எச்சங்களை தோண்டி எடுத்து, இந்து சமய முறைப்படி கிரியைகளைச் செய்து, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இறுதிக் கிரியைகளை நிறைவேற்றினர்