விலங்குகளை வேட்டையாடியதற்காக ஆறு சந்தேக நபர்களை பேராதனை பொலிஸார், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற உபகரணங்களுடன் கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் நேற்று (09.03.2025) காலை விலங்குகளை வேட்டையாடுவதற்காக யஹலதென்ன பிரதேசத்திற்கு சென்ற போது அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு, பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பேராதனை பொலிஸ் நிலையத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றுப் பார்வையிட்டபோது, சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு பன்றியும், விலங்குகளை வேட்டையாட ஜீப்பில் வந்த 6 பேரும் இருந்துள்ளனர்.
அதன்படி, சந்தேகநபர்களிடம் போரா 12 ரக தோட்டாக்கள் 3, ஒரு கோடாரி, ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு ட்ராகன் விளக்குகள் மற்றும் ஒரு கத்தியுடன் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 முதல் 71 வயதுக்குட்பட்ட மாவதகம பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
மேலதிக விசாரணையின் போது, பேராதனை பொலிஸ் நிலைய அதிகாரிகள், யஹலதென்ன பகுதியில் வீதியோரத்தில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 ரக போரா துப்பாக்கியைக் கண்டுபிடித்தனர்.
சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில், பேராதனை பொலிஸ் நிலையம் மாவதகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
பேராதனை பொலிஸாரும் மாவதகம பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.