இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில், அமெரிக்கா இந்தியாவிற்கு 30 நாட்கள் சலுகை காலத்தை வழங்கியுள்ளது.
அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அனுமதியில், 2026 மார்ச் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ரஷ்ய கூட்டமைப்பிற்கு சொந்தமான மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளை இந்தியாவிற்குள் விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, தொடர்புடைய வர்த்தக நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20% கையாளும் கடல்சார் சோதனைச்சாவடியான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முற்றுகையிட்டுள்ளதாலும், வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய எண்ணெய் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களாலும் மத்திய கிழக்கு முழுவதும் எண்ணெய் உற்பத்தி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் இந்தச் சலுகை இந்தியாவின் முக்கியமான எரிசக்தி விநியோக வழிமுறைக்கு ஒரு தற்காலிக உந்துதலாக அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.










