கரையோர ரயில் மார்க்கத்தில் கிங்தொட்ட ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்ட காலி குமாரி கடுகதி ரயிலை மீள தடமேற்றும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ரயில் தடம் புரண்டமையினால் பாரியளவில் சேதமடைந்த ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
17.08.2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் குறித்த ரயில் மார்க்கத்தில் ஒரு வழி போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
முழுமையாக இந்த ரயில் மார்க்கத்தில் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்காக புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மருதானை ரயில் நிலையத்திலிருந்து பெலியத்த நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த ரயில் நேற்று (16) மாலை தடம் புரண்டது.
இதன் விளைவாக, அம்பலங்கொடை ரயில் நிலையம் வரை கரையோர ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகளை மட்டுப்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.
ரயில் தடம் புரண்டதால் ரயில் மார்க்கம் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், அதன் புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இன்று காலை இயக்க திட்டமிடப்பட்ட ரயில்கள் கிங்தொட்ட ரயில் நிலையத்திற்குப் பிறகு அமைந்துள்ள தொடந்துவ, ஹிக்கடுவ, கஹாவ மற்றும் அம்பலங்கொடை ரயில் நிலையங்களில் இருந்து சேவைகளை முன்னெடுத்திருந்தன.