இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு, போரத்தொட்ட கடற்கரை பிரதேசத்தில் ஆட்டோ வண்டியுடன் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுளளது.
சனிக்கிழமை காலை இதனைக்கண்ட அப்பிரதேச மக்கள் கொச்சிக்கடை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்தனர். நீர்கொழும்பு வலய குற்றப் பலனாய்வு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன் சாரதியான் 57 வயது ஜயந்த புஷ்பகுமார என்பவரின் சடலமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி நெல்சன் குமாரநாயக்க ஸ்தலத்திற்கு விஜயம் செய்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டார்.
பொலிஸ் சார்ஜன் புஷ்பகுமாரவின் மனைவி மற்றும் மகளை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது சடலம் முற்றாக எரிந்துள்ளதனால் அவர்களால் சடலத்தை அடையாளம் கானமுடியவில்லை. முச்சக்கர வண்டியின் பின்பக்க இலக்கத் தகடு மூலம் முச்சக்கரவண்டி பொலிஸ் சார்ஜன் உடையது என அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இதன் போது சடலத்தை அடையாளம் கான்பதற்காக டி.என்.ஏ. பரிசோதனை நடாத்துவதற்கு பதில் நீதவான் நெல்சன் குமாரநாயக்க உத்தரவிட்டுள்ளார். டிஎன்ஏ பரிசோதனை முடிவு வரும்வரை சடலத்தை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம் என பதில் நீதவான் கட்டளை இட்டுள்ளதுடன் அதுவரை சடலத்தை நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் சார்ஜன் மனவேதனையுடன் இருந்ததாகவும் தனது மனைவியுடன் அடிக்கடி பிரச்சினை பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளன.
திங்கட்கிழமை 16ம் திகதி டிஎன்ஏ பரிசோதனையும், பிரேத பரிசோதனையும் நடாத்துவதற்க்காக சடலம் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொச்சிக்கடை பொலிஸாரும், நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் பிரிவு பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.