இஸ்மதுல் றஹுமான்
மினுவண்கொடை நகர சபையின் வரலாற்றில் முஸ்லிம் பெண் ஒருவர் பிரதி மேயராக பதவி ஏற்றுள்ளார்.கட்டான பிரதேச சபையின் தலைவியாக முதன்முறையாக பெண் ஊடகவியளாலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மினுவண்கொடை நகர சபையின் புதிய பிரதி மேயராக துவான் கிச்சில் சுரெய்யா பர்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.
மினுவண்கொடை நகர சபை வரலாற்றில் பெண் ஒருவர் அதுவும் முஸ்லிம் பெண் ஒருவர் பிரதி மேயராக நியமிக்கப்பட்ட முதல் சந்தர்பம் இதுவாகும். இதற்கு முன்னர் நகர சபைக்கு எந்தவொரு அரசியல் கட்சியிலிருந்தும் மேயர், பிரத மேயராக எந்த ஒரு பெண்ணும் நியமிக்கப்படவில்லை.
சர்வதேச பாடசாலையில் நீண்டகாலம் அதிபராக கடமையாற்றிய பர்வின் இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மினுவண்கொடை நகர சபைக்கு தேசிய மக்கள் சக்தியில் மினுவண்கொடை மத்திய வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
புதிய பிரதி மேயர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் நாம் எல்லோரும் ஒரே மனித சமூகம். மக்களை பிரித்து வேறுபடுத்தும் தன்மை தேசிய மக்கள் சக்தியில் இல்லை. இனமத வேறுபாடுகளை கலைந்த கட்சி மற்றும் அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளது.
எனக்கு கிடைத்துள்ள இந்த பதவியின் ஊடாக மினுவண்கொடை நகரத்திற்கு மித்திரமன்றி முழு மீனுவண்கொடை தொகுதி மக்களின நலன்கள் மற்றும் அபிவிருத்திக்காக அர்பணிப்புடன் சேவையாற்றுவதுடன் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப பாடுபடுவேன்.
எனது வெற்றிக்காக பங்களிப்புச் செய்த சகலருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கட்டான பிரதேச சபையின் தலைவியாக பெண் ஊடகவியளாலரான நிஷானி இரேஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியில் இனைந்துகொண்ட நிஷானி இரேஷா கட்டான பிரதேச சபை தேர்தலில் முதற்தடவையாக கந்தளவல வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
நீர்கொழும்பு, ஹரிச்சந்திர தேசிய பாடசாலையின் பழைய மானவியான இரேஷா ஊடகம் தொடர்பான டிப்லொமா பிடநெறியை முடித்துள்ளதுடன் தேசிய ரூபவாஹி கூட்டுத்தாபனம், சியத தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களில் ஊடகவியளாலராக கடமையாற்றியுள்ளார்.











