அனுதாபச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் எம்.பி.
மறைந்த பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப், இலங்கையில் நவீன சிறுநீரகவியல் துறையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் என அவரது மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அவரது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மருத்துவப் பேராசிரியரும், சிறுநீரகவியல் நிபுணருமான, வித்தியா ஜோதி பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவையிட்டு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது மறைவு நாட்டின் சகல சமூகங்களுக்கும் பேரிழப்பாகும்.
பேராசிரியர் ஷெரீப், இலங்கையில் நவீன சிறுநீரகவியல் துறையில் சர்வதேச அளவில் புகழ் பூத்த முன்னோடியாகத் திகழ்ந்தார். அவர் மருத்துவப் பேராசிரியராகவும், மருத்துவ நிபுணராகவும் சீரும் சிறப்புமாகப பணியாற்றி, அடுத்தடுத்த தலைமுறை மருத்துவர்களுக்கு சிறப்பாக வழிகாட்டியதுடன், நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை ஆற்றியுள்ளார்.
ஆரம்பத்தில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிலும், பின்னர் எங்கள் றோயல் கல்லூரியிலும் கற்றுத் தேறிய அவர், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்று ,பிரித்தானியாவில் பட்டப் பின்படிப்பை நிறைவு செய்திருந்தார்.கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பேராசிரியராகவும், கொழும்பு மருத்துவ பின்படிப்பு நிறுவனத்தில் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.
அத்துடன் , அவர் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திலும் மருத்துவப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
அவரது குறிப்பிடத்தக்க தொழில்முறை சாதனைகளுக்கு அப்பால், பேராசிரியர் ஷெரீப் தனது நோயாளர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து இலங்கையர்கள் மீதும் காட்டிய கருணை, பணிவு, மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக நெடுகிலும் நினைவுகூரப்படுவார். அவரது மேன்மை, நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவை மரபு என்பன மருத்துவத் துறையில் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்தும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும். அவர் தனது தாராள மனப் பான்மைக்காகவும், இலங்கை முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் அனைத்து சமூகத்தினர் உட்பட, தேவையுள்ளவர்களுக்கு ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைக்காகவும் பரவலாக நன்கறியப்பட்டவர்.
இந்தக் துயரமான தருணத்தில், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற உன்னதமான சுவன பாக்கியத்தை வழங்குவானாக.ஆமீன்.









