ஏ.எஸ்.எம்.ஜாவித் , 2025.02.25
மட்டக்குளி மோதர தாருள் தக்வா மத்ரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் பட்டமளிப்பு விழாவும் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு 03 இல் உள்ள பிஸப்ஸ் கல்லூரியின் மாநாட்டு மண்டபத்தில் மத்ரஸாவின் நிறுவுனரும் பணிப்பாளருமான அல்-ஹாபிஸ் யுஸ்ரி சுபைர் தலைமையில் இரண்டு அமர்வுகளாக இடம் பெற்றன.
முதல் அமர்வான கணிஸ்ட பிரிவு மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இடம் பெற்றது. இதன்போது பிரதம அதிதியாக அகில இலங்கை ஜமிய்யதுல் உலமாவின் பிரதித் தலைவர் மௌலவி தாசிம் மற்றும் அஸ்ஸெய்க் அனஸ் அவர்கள் விசேட அதிதயாகவும் கலந்து கொண்டிருந்தார்கள்;.
இரண்டாவது அமர்வில் பிரதம அதிதியாக வேல்ட் கலாசார நிலையத்தின் பணிப்பாளர் டொக்டர் றிஸாட் சலீம் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக இஸ்லாஹியா அரபுக் கல்லூரியின் செயலாளர் அஸ்ஸெய்க் ஸவாஹிர் எம் நௌசரும் கல் எளிய முஸ்லிம் மகளீர் அரபுக் கலாசாலையின் விரிவுரையாளர் அஸ்ஸெய்க் கஸ்னி மொஹமட் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள், உலமாக்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது ஆரம்பப் பிரிவு மற்றும் சிரேஸ்ட பிரிவுகளில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் ஒவ்வொரு பிரிவுகளிலும் தமது திறமைகைள வெளிகாட்டிய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவுப் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விசேடமாக மாலை இடம்பெற்ற மத்ரஸாவின் 6வது பட்டமளிப்பு விழா நிகழ்வில் புனித அல்குர்ஆனை முழுமையாக ஓதி மனனமிட்ட 8 மாணவிகள் அல் ஹாபிழா பட்டமும் 2 மாணவர்கள் அல் ஹாபிழ் பட்டமும் பெற்றதுடன் அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


