நாடளாவிய ரீதியில் நேற்று (03) பொலிஸாரால் நடத்தப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் மொத்தம் 748 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பின் ஒரு பகுதியாக, 25,870 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 23 நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதோடு மேலும் பிடியாணை நிலுவையிலுள்ள 371 சந்தேக நபர்கள் இந்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்திய 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் முறையற்ற விதத்தில் வாகனங்களை செலுத்திய 25 பேர் உட்பட பல்வேறு போக்குவரத்து குற்றங்களை மீறிய 3,202 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களைக் கைது செய்ய நாடு முழுவதும் இவ்வாறான விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

August 4, 2025
0 Comment
5 Views