பாராளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 2025.06.05 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் இந்த ஒவ்வொரு தினத்திலும் மு.ப. 9.30 முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள (1) முதல் (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஜூன் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை 2430/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பதற்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 18 ஆம் திகதி புதன் கிழமை மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை 2429/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட வெளிநாட்டு தீர்ப்புகளைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டத்தின் கீழ் கட்டளைகளை அங்கீகரிப்பதற்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஜூன் 19 ஆம் திகதி வியாழக்கிழமை, மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை கறவை மாடு இறக்குமதி செயற்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் II ஆம் பகுதியின் கீழ் 15,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கான முற்பணம் வழங்குதல் தொடர்பான 2025.05.21 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை மற்றும் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான 2025.06.04 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் இரண்டாவது அறிக்கை தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.
ஜூன் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை 2429/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை, 2434/12 மற்றும் 2435/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இரண்டு ஒழுங்குவிதிகள் அங்கீகரிப்பதற்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், 2025.06.03 அன்று முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தம்), வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தம்) மற்றும் வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தை, அந்தச் சட்டமூலங்களுக்கு எதிராக அரசியலமைப்பின் 121வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்படாவிட்டால், மேற்படி ஏற்கனவே திட்டமிடப்பட்ட அலுவல்களுக்கு மேலதிகமாக 2025.06.20 ஆம் திகதி மு.ப. 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள குழுவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.