பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் நாடளாவிய ரீதியில் நேற்று ஆரம்பமாகியிருப்பினும், கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் இன்று ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளுடன் தேவையான அறிவித்தல்களை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்காமையால் இவ்விரு மாவட்டங்களிலும் விநியோகம் தாமதமாகியுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தேர்தல் ஆணைக்குழு இப்போது தேவையான அறிவித்தல்களை வழங்கியுள்ளது, மேலும் அவை நியமிக்கப்பட்ட தபால் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பாராளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் நேற்று தொடங்கியது.
இப்பணிகளுக்காக சுமார் 8,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதித் தபால் மா அதிபர் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நவம்பர் 7 ஆம் திகதிக்குள் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெறாத நபர்கள் அருகிலுள்ள தபால் நிலையத்திலிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நவம்பர் 1 மற்றும் 4ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது
இந்த திகதிகளில் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் வாக்களிக்க முடியும் என்பதை உறுதிசெய்வதற்கான வசதிகள் வழங்கப்படும்.