தையிட்டி திஸ்ஸ விகாரை குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் குறிப்பிடும் வகையில் செயற்பட்டால் மத மோதல்களே ஏற்படும். எனினும், இந்தப் பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் சிறந்த தீர்வு முன்வைக்கப்படுமென்று சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (09) வியாழக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தையிட்டி திஸ்ஸ விகாரை உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
‘‘பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் நீதி அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் குறிப்பிடுவதை போன்று இந்த விடயத்துக்கு தீர்வுக் காண நடவடிக்கை எடுத்தால் அது மத மோதல்களையே ஏற்படுத்தும்.
யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரைக்குரிய சிறந்த தீர்வு ஓரிரு வாரங்களில் முன்வைக்கப்படும். எமக்கு எதிராக பேசும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிடும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுத்து வருகிறோம். சுவிட்ஸர்லாந்தின் பெடரல் பற்றி பேசிப் பயனில்லை. சகல பிரச்சினைகளுக்கும் இங்கிருந்தவாறு தான் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண வேண்டும். அதனை மறந்து விடக்கூடாது’’ என்றார்.