ஆகஸ்ட் 09, மிரிஸ்ஸ – அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தாராளமான நிதியுதவியுடன், சர்வதேச புலம்பெயர்வு அமைப்பால் (IOM) நடைமுறைப்படுத்தப்பட்ட படகு கண்காணிப்பு அமைப்பின் (VMS) செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக, அவுஸ்திரேலிய பொதுநலவாயத்தின் ஆளுநர் நாயகம், மேன்மைதங்கிய கௌரவ சாம் மொஸ்டின் AC அவர்கள், இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திற்கு விஜயம் செய்தார்.
ஆளுநர் நாயகத்தை, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள் வரவேற்றார். இந்நிகழ்வில், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய போல் ஸ்டீபன்ஸ், இலங்கை மற்றும் மாலைதீவிற்கான IOM தூதரகத் தலைவர் கிறிஸ்டின் பார்கோ, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி கோலித கமல் ஜினதாச மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த ஆகியோர் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற (IUU) மீன்பிடித்தலைக் குறைப்பதற்கும், ஒழுங்கற்ற கடல்வழி இடம்பெயர்வு மற்றும் ஏனைய நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கும், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் VMS-இன் முக்கிய பங்கு குறித்தும், கப்பல்கள் ஆபத்தில் இருக்கும்போது கடல்சார் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க இந்த அமைப்பு வழங்கும் முக்கிய ஆதரவு குறித்தும் ஆளுநர் நாயகத்திற்கு விளக்கமளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, VMS டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்ட பல நாள் மீன்பிடிப் படகுகளை தூதுக்குழுவினர் பார்வையிட்டதோடு, VMS தொழில்நுட்பம் மீன்பிடித் துறையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கலந்துரையாடலில் மீன்பிடி சமூகத்தினருடன் ஈடுபட்டனர்.
VMS குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர் நாயகம், “கடல்சார் பரப்பை மிகவும் பாதுகாப்பானதாகவும், நிலையானதாகவும் மாற்றுவதற்கான இலங்கையின் முயற்சியில் பங்கேற்க கிடைத்தமையிட்டு அவுஸ்திரேலியா பெருமை கொள்கிறது. படகு கண்காணிப்பு அமைப்பின் (VMS) வெற்றிகரமான அமுலாக்கம், மூலோபாய கூட்டாண்மை மற்றும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பு மூலம் அதை அடைய முடியும் என்பதற்கு ஒரு சான்றாகும். VMS ஏற்கனவே உறுதியான முடிவுகளை வழங்குவதையும், கடல்சார் எல்லை நிர்வாகத்தை வலுப்படுத்துவதையும் மற்றும் மீன்பிடி சமூகங்களை வலுவூட்டுவதையும் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
ஆளுநர் நாயகத்தின் விஜயம் குறித்து கருத்து தெரிவித்த கௌரவ ரத்ன கமகே, “மேன்மைதங்கிய சாம் மொஸ்டினின் இலங்கை விஜயமானது, நமது நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கியமான தருணமாகும். இலங்கையின் மீன்பிடித் துறைக்கு அவுஸ்திரேலியாவின் ஆதரவு பல ஆண்டுகளாக உறுதியாக உள்ளது, மேலும் VMS இந்த ஒத்துழைப்பின் முக்கிய விளைவாகும்” என்றார்.
“அவுஸ்திரேலியாவின் ஆதரவிற்கு நன்றி, சர்வதேச விதிமுறைகளுக்கு இலங்கை இணங்குவது, மீன்பிடி பொருட்களை ஏற்றுமதி செய்யும் எமது திறன் மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு சரியான நேரத்தில் ஆதரவளிக்கும் எமது ஆற்றல் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன” என்று அவர் மேலும் கூறினார்.
9.96 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் ஒட்டுமொத்த நிதி மானியத்துடன் VMS திட்டம் (2021-2025), செய்மதி அடிப்படையிலான படகு கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் மூலம் 4500 க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளை கொண்ட இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பல்களின் ஒழுங்குமுறையை மேம்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்டது. இது ஒரு மீன்பிடி கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வைக் கருவியாகும், இது மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் (DFAR) மற்றும் கடல்சார் சட்ட அமலாக்க முகவர் நிலையங்களுக்கு பல நாள் மீன்பிடிக் கப்பல்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவுகிறது, இது கடல்சார் அச்சுறுத்தல்கள் மற்றும் ஆபத்தில் உள்ள கப்பல்களை முன்கூட்டியே அடையாளம் காண வழிவகுக்கிறது. VMS டிரான்ஸ்பாண்டர், கடல்சார் அவசரநிலைகளின் போது ஒரு அபாய சமிக்ஞையாகச் செயல்பட்டு, சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு பங்களித்து, மீனவர்களின் உயிரைக் காப்பாற்றுகிறது.