கடந்த ஆட்சிக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 1,590 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு 12.09.2024 எஸ். துரைராஜா, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகள் இருப்பின் 12.09.2024 முதல் 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இன்று முதல் நான்கு வாரங்களுக்குள் திருத்தப்பட்ட பிரதிவாதிகள் பட்டியலை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்பின், மனுவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.