

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் இம்முறை (2025) இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் SHIMMERING SCHOLARS -2025 நிகழ்வு வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச். நுஸ்ரத் பேகத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் அதிதிகளால் மாலை அணிவித்து, மகுடம் சூட்டி, கலாபூஷணம் ஏ. இஸ்ஸதீன் தலைமையிலான அல்ஹிலால் பாடசாலை மாணவர் பொல்லடிக் குழுவினர் மற்றும் பேண்ட் வாத்திய குழுவினரால் வரவேற்பு மற்றும் கௌரவம் அளிக்கப்பட்டு மாணவர்கள் வீதி வழியாக அழைத்து வரப்பட்டனர்.
கௌரவ அதிதியாக சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.அஸ்மா மலிக் நிகழ்வில் கலந்து கொண்டார்.
நிகழ்வில் சிறப்பதிதிகளாக பொறியியலாளர் எம்.சி. கமால் நிஷாத், இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் ‘அதிபர் திலகம்’ யூ.எல்.நசார் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு, கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி வளவாளர் எஸ்.எம்.எம். அன்சார் மற்றும் பிரதேசத்தின் இதர பாடசாலை அதிபர்களான எம்.எஸ்.எம்.ஆரிப், எம்.சி. றிப்கா அன்ஸார், எம்.எஸ்.எம். பைஸால் ஆகியோர் விசேட அழைப்பாளர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
மற்றும் பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் நலன் விரும்பிகள், வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இம்முறை இப்பாடசாலையில் இருந்து 42 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று புலமைக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
நிகழ்வில் புலமையில் சாதனை நிலை நாட்டிய மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள், வெற்றிக்கேடயங்கள், புத்தகப்பைகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.










