இலங்கைக்கான விரிவான நிதி வசதி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை நிறைவு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பணியாளர் மட்டத்திலான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த மீளாய்வு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பணிக் குழுவின் தலைவர் இவான் பாப்பஜோர்ஜியோ தலைமையிலான குழுவினர் மார்ச் 26 முதல் ஏப்ரல் 9 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
விஜயத்தின் முடிவில் அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், நிறைவேற்று சபையின் அனுமதி கிடைத்தவுடன் இலங்கைக்கு இதுவரையில் வழங்கப்பட்ட மொத்த நிதி உதவி 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும் என்று தெரிவித்துள்ளார்.










