பண்டிகைக் காலத்திலும், பேரிடர் காலத்திலும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மோசடிகள் அதிகரித்து வருவதால் இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு (இலங்கை CERT), பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக சமூக ஊடக தளங்கள் வழியாக இணைய மோசடி மற்றும் பணமோசடி முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோசடியாளர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி போலி விளம்பரங்கள், வெகுமதிகள் மற்றும் பரிசுகளை வழங்குவதாக பொதுமக்களை தவறாக வழிநடத்துகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சில தனிநபர்களின் வங்கிக்கணக்குகளுக்குள் இரகசியமாக உள்நுழைந்து , மோசடி செய்பவர்களால் கணக்குகள் கையகப்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
எனவே சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை தொடர வேண்டாம் என்றும், தனிப்பட்ட தகவல்களைப் பகிரும்போதும்,தெரியாத நபர்கள் அல்லது சரிபார்க்கப்படாத வலைத்தளங்களை அணுகும்போதும் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கடவுச்சொற்களை ஒருபோதும் வெளி நபர்களிடம் பகிர வேண்டாம் என்றும் இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.










