இஸ்மதுல் றஹுமான்
ஒரு கோடி இருபது இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப் பொருளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியே எடுத்துச் சென்ற வெளிநாட்டு விமான பயணியையும் அவரை அழைத்துச் செல்ல வந்த இலங்கையர்
இருவரையும் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவர் பெண்களைப் போல் ஆடை அணிந்த பாலின பரிமாற்றத்துக்குள்ளான 24 வயது தாய்லாந்து நாட்டவராவர்.
அவர் இந்த குஷ் போதைப் பொருளை தாய்லாந்தில் கொள்வனவு செய்து இந்தியா, பும்பாய் நகருக்கு வந்து அங்கிருந்து இந்தியா விமான சேவையின் ஏ.ஐ. 276 இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் விமான நிலையத்தில் சகல பரிசோதனைகளையும் முடித்து விட்டு வெளியேறிச் செல்லும் போது பயணியையும், பயணியை அழைத்துச் செல்ல வந்த இருவரையும் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
தாய்லாந்து விமானப் பயணி கொண்டு வந்த பயணப் பொதியில் இனிப்புப் பண்டங்கள் அடங்கிய பார்சல்களில் ஒரு கிலோ கிராம் குஷ் போதைப் பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விமானப் பயணியையும் அவரை அழைத்துச் செல்ல வந்த கடவத்த, யக்கல பிரதேசங்களைச் சேர்ந்த 20, 24 வயது இளைஞர்கள் இருவரையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் போதைப் பொருளையும் நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தி எதிர் வரும் 23 ம் திகதி வரை கொழும்பு போதைப் பொருள் ஒழிப்பு தலைமை பணியகத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணை மேற்கொள்ள தடுப்புக் காவல் உத்தரவை பெற்றுள்ளனர்.