கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக நியமனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தமது நிரந்தர நியமனங்கள் குறித்து கடந்த கால ஆளுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். அவர்களால் எவ்வித வெற்றிகரமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாத நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தங்களது நிரந்தர நியமனம் குறித்தும், நிரந்தர நியமனம் இல்லாததால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
ஆளுநர் செந்தில் தொண்டமான் இவ்விடயம் குறித்து ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வினைப் பெற்று தருவதாக உறுதியளித்திருந்தார்.
ஆளுநர் செந்தில் தொண்டமானால் உரிய ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு 1,350 இற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஒரே நாளில் நிரந்தர நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
ஒன்பது மாகாணத்திலும் உள்ளூராட்சிமன்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது குறித்து பிரச்சினைகள் இருந்த போதும் கிழக்கு மாகாண ஆளுநர் இதுக்குறித்து அதிகம் கவனம் செலுத்தி ஒரே நாளில் இந்நியமனங்களை வழங்கி வைத்தமை என்பது பாராட்டுகிரியது என பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 10 வருடமாக காணப்பட்ட தங்களது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை ஒரு வருடக் காலத்திற்குள் பெற்றுத்தந்த ஆளுநருக்கு உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.