கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இம்முறையும் கோலாகலமாக கச்சத்தீவில் 28.02.2026 நடைபெறுகிறது.
இந்தத் திருவிழா இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் ஒன்றிணைவுடன் நடத்தப்படுகிறது.
புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கு பொதுவாக 3500-க்கும் மேற்பட்ட இந்திய பக்தர்கள் கச்சத்தீவுக்கு வருகை தருகின்றனர்.
இக்கொடியேற்ற நிகழ்வில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்தினாதன் கலந்துகொண்டதுடன், அவராலேயே திருவிழாக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு உற்சவ நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து யாழ் ஆயர் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் தலைமையில், பல பங்குத்தந்தையர்களின் பங்களிப்புடன் விசேட ஆராதனைகள் இடம்பெறுகின்றன.
யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்காக சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது.
சுமார் 1.15 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட சிறிய தீவான கச்சத்தீவு, இலங்கைத் தீவுக்கூட்டத்தில் இலங்கையிலிருந்து வெகு தொலைவிலும் இந்தியாவுக்கு மிக அருகிலும் அமைந்துள்ள ஒரு தீவாகும்.
இதன் உரிமையை முன்னிறுத்தி கடந்த காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அரசியல் ரீதியான முரண்பாடுகள் கூட ஏற்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், 1974 ஆம் ஆண்டில் இரு நாட்டு மீனவர்களும் அதனைப் பயன்படுத்துவது தொடர்பான நிபந்தனைகளுடன் கச்சத்தீவின் உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டது.
இவ்வாறான பின்னணியிலும் கூட, வருடாந்தம் இரண்டு நாட்கள் அத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா இரு நாட்டு மீனவர்களின் பங்களிப்புடன் கொண்டாடப்படுகிறது.










