கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாயலத்தின் வருடாந்த திருவிழா 23.02.2024 ஆரம்பமாகின்றது.
23.02.2024, 24.02.2024 இடம்பெறும் இந்த திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஆரம்பமாகும் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க போவதில்லை என தமிழக தரப்பினர் அறிவித்துள்ளனர்.
இலங்கையில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றமையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் தமிழக மீனவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் விசைப் படகுகள் இயக்கப்பட மாட்டாது என வேர்க்கோடு கச்சத்தீவு புனித பயண ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
எனவே தமிழக தரப்பினர் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாயலத்தின் வருடாந்த திருவிழாவில் பங்கேற்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை? இந்தியாவில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலை இலக்கு வைத்து? இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினையை சிலர் அரசியலாக்க முற்படுவதாக அகில இலங்கை மீனவ தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இலங்கை மீனவ தொழிற்சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அண்ணராசா குறிப்பிட்டார்.










