இவ்வருட சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலத்தில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரிப்பதைக் கருத்திற்கொண்டு, விசேடமாக போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதிகளவில் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களின் புகையிரத நிலையங்கள் மற்றும் பிரதான பேருந்து நிலையங்களை மையப்படுத்தி போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் திட்டங்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த விசேட திட்டம் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பதுடன், புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னர் பொதுமக்கள் மீண்டும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்குத் திரும்பும் வரை இது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
“புத்தாண்டுக்காக விசேடமாக போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளில் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துகிறோம். ஏனைய வருடங்களைப் போன்றே கொழும்புப் பகுதியில் உள்ள புகையிரத நிலையங்கள் மற்றும் பிரதான பேருந்து நிலையங்களை மையப்படுத்தி போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பிரதான நகரங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படும்.
கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் மற்றும் பொருட்களைக் கொள்வனவு செய்ய நகரங்களுக்கு வருபவர்களின் பாதுகாப்பு குறித்து பொலிஸ் மா அதிபர் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அதற்கமைய அந்தந்தக் பிராந்தியங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளின் கீழ் திட்டமிட்ட அடிப்படையில் பொதுமக்களுக்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஏற்கனவே பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், ஏப்ரல் முதலாம் திகதி முதல் புத்தாண்டு முடிந்து மக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வரை இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படும்” என்றார்.










