நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் வருடத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும், 05 வருடங்களுக்குள் நாட்டின் சகல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதே இதன் நோக்கமாகும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, பல்கலைக்கழகங்கள் மீது இது குறித்த பரந்த பொறுப்பு சார்ந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் AI தொழில்நுட்பம் அல்லது செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்துவது தொடர்பில் பல்கலைக்கழக கல்வியலாளர்களுடன் 30.05.2024 ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கு, இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தை விரைவாக ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் வெளிநாட்டுக் கடனைச் செலுத்துவதற்கு 2027 – 2040 வரை கால அவகாசம் இருப்பதாகவும், 2035 ஆம் ஆண்டளவில் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறான சமூக-பொருளாதார மாற்றத்துக்காக நவீன தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் லியுறுத்தினார்.
2035 ஆம் ஆண்டளவில் உருவாக்கப்படும் புதிய பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு AI இன் வகிபாகம் முதன்மையாக இருக்க வேண்டுமென் என்பதோடு, நவீன தொழில்நுட்பத்தில் தெற்காசியாவின் அடையாளமாக இலங்கையை மாற்றுவதற்கான இயலுமை காணப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
AI தொழில்நுட்பம் அல்லது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது தொடர்பாக பல்கலைக்கழகங்கள் பலவற்றின் பேராசிரியர்கள் மற்றும் கல்வியலாளர்களினால் கூட்டாக தயாரிக்கப்பட்ட பிரேரணையும் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
பல பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே AI தொழில்நுட்பத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டிய கல்வியலாளர்கள், அந்த திட்டங்களின் செயல்பாடு மற்றும் இலக்குகள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.