(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் (மே 17) உலக உயர்குருதி அழுத்த தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவணியும் உணவுக் கண்காட்சியும் கருத்தரங்கும் பிராந்திய தொற்றா நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர் தலைமையில் 17.05.2025 சனிக்கிழமை இடம் பெற்றது.
“உங்கள் இரத்த அழுத்தத்தை துல்லியமாக அளவீட்டு, அதனைக் கட்டுப்படுத்தி, நீண்ட நாட்கள் உயிர் வாழுங்கள் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில், விழிப்புணர்வு நடைபவணி நிகழ்வும் இடம்பெற்றதோடு, இந்நடைபவணியில் “இலங்கையில் 83 சதவீதமான உயிரிழப்பு தொற்று நோய்களினால் ஏற்படுகின்றது”, “உயிரிழப்பை ஏற்படுத்தும் தொற்றா நோய்களில் மாரடைப்பு, பக்கவாதம் என்பன பிரதான காரணியாகும்”, “இலங்கையில் மூன்றில் ஒருவர் உடல் அசைவு அற்றவர்களாக உள்ளனர்”, “உடற்பயிற்சி உயர் குருதி அமுக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும்”, “இலங்கையில் 70 சதவீதமானவர்கள் அவசியமான அளவு மரக்கறி, பழங்கள் உட்கொள்வதில்லை” என்ற சுலோகங்களை ஏந்தியவாறு பொதுமக்களும், தாதியர்களும் பிரதான வீதி வழியாக விழிப்புணர்வூட்டும் முகமாக உலா வந்தனர்.
அத்துடன் உயர் குருதி அழுத்தத்தால் பாதிப்புக்குள்ளானவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் உணவுக் கண்காட்சியாக காண்பிக்கப்பட்டு, அவ்வுணவுப் பண்டங்கள் சம்பந்தமாக போதியளவு விளக்கங்களும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பரினால் வழங்கப்பட்டன.
அத்தோடு, உயர் குருதி அழுத்தம் தொடர்பாகவும், அதனைத் தடுப்பது சம்பந்தமான துண்டுப் பிரசுரங்களும் இதன்போது விநியோகிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.