இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அணிசேரா மாநாட்டுக்காக உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் தற்போது ஜனாதிபதி தங்கியுள்ளநிலையில், தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவி தொடர்பான தேர்தல் முடிவுகள் தொடர்பில், அவருக்கு தெரியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே சிறீதரனுக்கு 21.01.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தொலைபேசி அழைப்பெடுத்து ஜனாதிபதி வாழ்த்துத்
தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமைச்சர்கள், பெரும்பான்மைக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறீதரனுக்குத் தமது வாழ்த்தைத் தெரிவித்துள்ளனர் என அறியமுடிகிறது.
தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறீதரன் தெரிவான விடயத்தை தென்னிலங்கையின் பத்திரிகைகளும், இணைய ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










