கடல் சார் விஞ்ஞானம் மற்றும் சூழலியல் தொடர்பான ‘அயோரா’ சிறப்புச் செயற்திறன் மையத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து, இலங்கை மார்ச் 11 ஆம் திகதி ‘அயோரா’ தினத்தைக் கொண்டாடியது.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் இந்த மையத்தின் விருந்தோம்பல் பங்காளியான இலங்கை சமுத்திர பல்கலைக்கழகம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்றது.
கடல் சார் நிர்வாகத்தில் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளின் சங்கத்தின் கொள்கைகள் மீதான இலங்கையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்தக் கொண்டாட்டம் அடிக்கோடிட்டுக் காட்டியது.
இந்தியப் பெருங்கடல் பிராந்திய சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை வலியுறுத்தும் வகையில், “அயோரா வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது” எனும் 2026 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் இந்த விழாவில் முன்னிலைப்படுத்தப்பட்டது.
கடல் சார் விஞ்ஞானம் மற்றும் சூழலியல் தொடர்பான இந்த விசேட மையம், பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கு இடையே விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சி, அறிவுப் பகிர்வு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றிற்கான ஒரு மத்திய நிலையமாகச் செயல்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
நிகழ்வின் போது இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளின் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ் ரஞ்சனின் செய்தி இணைய வழியில் வெளியிடப்பட்டது. மேலும், மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரித பட்டியாராச்சி முதன்மை உரையை நிகழ்த்தினார்.
இந்த மையத்தின் திறப்பு விழாவைத் தொடர்ந்து, கடல் சார் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் நோக்கில் தொடர்ச்சியான இணையவழி கருத்தரங்குகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இது பிராந்திய விஞ்ஞான ஒத்துழைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.










